Thursday, 24 December 2020

The way to அனுராதபுர....(part 1)


சென்ஜோன்ஸ் vs சென்றல் (லாஸ்ட் லீக் மச்)

சில மாதங்களில் எல்லாம் 2000 ஆம் ஆண்டு பிறந்துவிடப் போகிறது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானம் எங்களது அண்டர் செவன்டீன் கிறிக்கட் அணியை அதிகாலை வேளையில் அன்போடு வரவேற்கிறது. எங்களுக்கும் (சென் ஜோன்ஸ்) சென்றலுக்குமான (மத்திய கல்லூரி) இறுதி லீக் போட்டி அது. சென்றல் கொலிஜ் மைதானத்தைப் பற்றி  சொல்ல வேண்டுமென்றால் யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய பாடசாலை  மைதானம் அதுதான். வடக்கு தெற்காக ஆடுகளத்தைக் கொண்ட  மைதானத்தின் வட  முனை மணிக்கூட்டுக் கோபுரமுனை என்றும்; தென்முனை சுப்பிரமணியம் பூங்கா முனை என்றும் சொல்லப்படும். யாழ்ப்பாணத்தின் ஆகச்சிறந்த பல கிரிக்கட் போட்டிகளின் ஐ விட்னஸ் சென்றல் கொலிஜ் கிரவுண்ட்தான். 


வடக்கு இலங்கையின் கிரிக்கட்டின் மிகப்பெரும் போரான  'வடக்கின் சமர்'களை அதிகளவில் தன்  மார்பில் தாங்கிய சென்றல் கொலிஜ் மைதானம் அன்றைய சிறு போருக்கும் தயாராகவே இருந்தது. அந்தப் போட்டி எம்மைப் பொறுத்தவரை மிக முக்கியமான போட்டி, 'டூ ஓர் டை'  மச். லீக் போட்டிகளில்  கொக்குவில்  இந்துக் கல்லூரியுடனான போட்டியில் ஏற்பட்ட தோல்வி இந்த போட்டியில் வென்றேயாக வேண்டிய கட்டாயத்தை தந்திருந்தது. அரையிறுதிக்கான வாசல்படி இந்த போட்டியின் வெற்றியே என்பதால் சிறிது நேவேர்ஸ் எங்களுக்குள் இருந்தது. 


முதலில் பந்துவீச ஆரம்பித்த எமக்கு ஆரம்பம்   சிறப்பாக இருந்தாலும்; சென்றல்  பின் வரிசை வீரர் 'கொக்கு' சசி அடித்த அற்புதமான  அரைச்சதம் எமக்கான இலக்காக 199 ஐ நிர்ணயித்தது. அவர்களது மைதானம், மிகப்பெரிய மைதானம், நாங்களோ 17 வயத்துக்குட்பட்டவர்கள், 199 எல்லாம் அன்றய தேதியில் இமாலய இலக்கு. ஆனாலும் சேஸிங் நிதானமாக இலக்கை நோக்கி சென்றுகொண்டிருந்தது; ரெகுலர் இன்டவலில் விக்கட்டுகள் சரிந்துகொண்டிருந்தாலும் ஒவ்வொரு விக்கட்டுகளுக்குமிடையிலான இணைப்பாட்டமும் போதுமானதாக இருந்துகொண்டிருந்தது. 


பீப்பா....  விக்கட்  கீப்பர் பட்ஸ்மன், அது மட்டுமில்லை எங்கள் அணியின் ஸ்டார் பட்ஸ்மன் கூட, என்னைக் கேட்டால் உள்ளூரில்  one of the finest & Most positive Batsman i ever seen in my age என்று சொல்வேன்.  அன்றைய போட்டியின் இறுதி நம்பிக்கையாக ஆடிக்கொண்டிருந்த பீப்ஸ் ஆட்டமிழக்க;  எங்கள் இறுதி  நம்பிக்கையும்  சரிந்ததுவிட்டது. ஒரு வழியாக தட்டுத்தடுமாறி தேவையான ஓட்டங்களின் எண்ணிக்கை 20 க்கு குறைந்திருந்த நிலையில் எட்டாவது விக்கெட்டும் விழுந்தது. 


10 ஆம் இலக்கத்தில் உள்ளே துடுப்பாட்ட(எழுத்துப்பிழை இல்லை..) இறங்கிக்கொண்டிருக்கிறேன்.. ஆனால் எதுவுமே ஐடியா இல்லை, வெல்வோம் என்கிற நம்பிக்கையுமில்லை, உடம்பு முழுக்க டென்ஷன், தோற்றுவிடுவோம் என்பதை முழுமையாக நம்பியிருந்தேன்.  எதிர்கொண்ட முதல் மூன்று நான்கு சூழல்  பந்துகளும் என் மார்பிலும் வயிற்றிலும் ஏறி இறங்கி தடுக்கப்போன எனது துடுப்பை கணக்கெடுக்காமல்  அசிங்கப்படுத்திக் கொண்டிருந்தது. 


பிரியந்தா...! முதல் போட்டிகள் எதிலும் பெரிதாக சோபிக்கவில்லை, மறு முனையில் ஆடிக்கொண்டிடுந்தான். ஆனால் எங்களது சாம்பியன் கிண்ணம் அவனால்தான் கை  கூடவேண்டும் என்பது இரண்டு தடவைகள் எழுதப்பட்டிருந்தது. ஒரு போட்டி இன்றைய போட்டி, அடுத்த போட்டி இறுதிப்போட்டி, இறுதி போட்டியை பற்றி பின்னர் பார்ப்போம். இப்போது மணிக்கூட்டு முனையிலிருந்து வீசப்பட்ட  லெந் பந்து ஒன்றை பிரியந்தா எதிர் கொள்கிறான். இரண்டு ஸ்டெப் இறங்கி வந்து அவன் Loft  பண்ணிய பந்து லோங் ஓன் பக்கமாக மேலெழும்புகிறது. 


மறு முனையில் நின்றிருந்த நான் திரும்பி பார்க்கிறேன், ஸ்கோர் போட்டிக்கு சந்தேகம் வரக்கூடாதென்று ஸ்கோர்போட் பக்கமாகவே அந்த பந்து ஆறாகிறது. வெற்றி வாய்ப்பு நெருங்குகிறது, பிரியந்தாவின் பாசிட்டிவ் ஸ்ரைக்கினால் ஒரு கட்டத்தில் விரைவாகவே  ஸ்கோர் சமநிலையை அடைகிறது.  ஓவரின் முதல் பந்து, வேகப்பந்து வீச்சாளர் ஓடி வருவதை பீதியுடன் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன், இந்தப் பந்தை மறிப்பது மட்டும்தான் என்  நோக்கம், ஸ்கோரிங் பற்றி எல்லாம் துளிகூட சிந்தனை இல்லை. மிடில் ஸ்டம்ப்  லைனில் விழுந்த பந்து பாட்ஸ்சை  நோக்கி வந்தது, லெக் சைடில் திருப்பியிருக்க வேண்டிய பந்தை பிழையாக நேராக  தடுத்தாடினேன், பந்து அவுட் சைட் எட்ஜில் பட்டு லெக் திசையில்  ஒரு ஓட்டம் கிடைக்கப் பெற  போட்டி வெற்றி..! 


முதல் நாள் இறுதி லீக் போட்டியில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் கப்டன் ஸ்டீவ் வோ 120 ஓட்டங்கள் அடித்து அணியின்  வெற்றி ஓட்டம் பெற்ற பின்னர் துடுப்பை சுழற்றிக்கொண்டு ஓடிவந்த  காட்சி மனதில் வர, நானும் அதையே  செய்தேன்; வெறும் 2/3 ஓட்டம் மட்டும் பெற்றிருந்த நிலையில். இத்தனைக்கும் முட்டையிட்ட கோழி பிரியந்தா கொக்கரிக்காமல்  இருக்க, பாத்துக்கொண்டிருந்த கோழி நான்  கொக்கரித்திருந்தேன். வெளியிலிருந்தும் ஏற்கனவே  முட்டையிட்ட கோழிகளும் மகிழ்ச்சியில் கொக்கரித்துக் கொண்டிருந்தன. 


நானோ அடுத்தடுத்த பந்தில் பைத்தியக்காரத்தனமாக  ரன்னவுட் ஆகி வெளியே வந்துகொண்டிருந்தேன்; பிறையின் லாராவின் சாதனையை முறியடித்த திருப்தியைவிட அதிகமான மகிழ்ச்சியில்..!  ஆனால் நடந்ததோ வேறு; வெளியில் வந்தவுடன் எதிர்பார்க்காமல் எல்லோருக்கும் கிழி  விழ ஆரம்பித்தது. அமலசீலன் சேர்... அன்றய எங்களது POG (பிரிபக்ட்  ஒஃப் கேம்). "நெட் ரன்ரேட் தேவை" அது இதெண்டு  நடக்குது. "விடுங்கடா இவர் சென்ரல் கொலிஜ் ஓல்ட் ஸ்டூடன்ட், தன்ட  ஸ்கூல் தோத்த கடுப்பில் கத்திறார்" என்று நம்மள்ல ஒருத்தன் 'பிழையா' ஆறுதல் சொன்னான்; அவன் சொன்னது பிழைதான், ஏனென்றால் நாங்கள் மிக சொற்பமான நெட் ரன்ரேட்டில்தான் அரையிறுதிக்கு தெரிவாகி இருந்தோம்; அமலசீலன் சேர் சொன்னது சரி...!  ஆனால் எனக்கும் அமலசீலன் சேருக்குமான சம்பவங்கள் அத்தோடு நிறைவு பெறவில்லை... அது தொடர்ந்தது, தொடரும்.


சயன்ஸ் ஹோல் - ஒலெவலில் மற்ஸ் D & C எடுத்தால் ஏலெவலில் மற்ஸ் படிக்கலாம் என்று நம்பிய ஆயிரம் பேரில் ஒருவனாக நானும் அன்றைய வகுப்பிற்கு செல்கிறேன். எனது நண்பர்கள் இருவர், யாழ் இந்தக் கல்லூரியை சேர்ந்தவர்கள் "என்ன செமி பைனல்  எங்களிட்ட  வந்து மாட்டீட்டீங்களா? எங்கட ஒப்பினர்ஸ் காணும் உங்களுக்கு, ராகுலன் ஒவ்வரு மெச்சும் முதல் போலே சிக்ஸ் / ஃபோர் அடிச்சித்தான் துடங்குவான்" என out of the ground sledging ஆரம்பித்தனர். 


செமி ஃபைனல் - vs Jaffna Hind

அதற்கு முதல் யாழ் இந்து மைதானத்தில் ஆடிய அனுபவம் பெரும்பாலானவர்களுக்கு இல்லை... பந்துவீச்சு, துடுப்பாட்டம் என்று பலன்ஸான பலம்வாய்ந்த  அணி, சொந்த மைதானம் வேறு...! களமிறங்கினோம். துடுப்பாட நிற்பது ராகுலன், முதல் பந்தில் ஆறடிக்க நிற்பதுபோலவே அவர் ஸ்ரான்ஸ் உணர்த்தியது... ஆனால் பாருங்கள் பந்துவீச தயாராக இருந்தது எங்களது ராகுலன்.   ராகுலன் மாதிரி  swing control & pace  இரண்டையும் சரியாக  மெயின்டெய்ன் பண்ணிய போலேர்ஸ் மிக அரிது... சரியான டெக்னிக் கோச்சேர்ஸ் இருந்திருந்தால் ராகுலன்  இன்னும் அதிக உயரம் போயிருக்கலாம்...!  மறந்துவிட்டேன் உயரம் என்றதும் ஞாபகம் வருகிறது உருவத்திலும் ஆள் ஆஜானுபாகு தோற்ற உயரம்தான்....! ஒரு முனையில் சிக்ஸர் ராகுலன் துடுப்புடன், மறுபக்கம் swing & pace ராகுலன் பந்துடன்.... கொட்டாவி விட்டபடி  deep cover ல் நின்று எந்தப்பக்கம் அந்த ப்ரோ சிக்ஸர் அடிக்கப்போகிறார் எண்டு பார்த்துக்கொண்டே நிற்கிறேன்....! முதல்பந்தே "இந்தா  அடிடா இவனே"  என batsman ஐ invite பண்ணி ஒரு  நேர்த்தியான பவுன்சர்... yes, he also very good batsman, he selected right shot selection... but unfortunately timing missed. little top edged & caught behind.  finally it's an easy soft dismissal in very first ball. scorecard 0/1 

batsman crossed... அடுத்த ஓப்பினர் இரண்டாவது பந்தை எதிர்கொள்ளப்போகிறார், கோபி.. எனக்கு சின்னவயசில இருந்தே நண்பன். அளவுக்கு அதிகமாக உயரமாக வளர்ந்தவர்களில் அவனும் ஒருவன். ராகுலன் இரண்டாவது/மூன்றாவது பந்தை வீசுகிறான்.. out swing பந்து, Just short & pitch wide outside off stump, எட்டிக் cut shot   அடிக்கிறான், top edge,  வானத்தை நோக்கி எழுகிறது, “பீப்பா ஏன் பந்துக்கு போகாமல் மேலே போகிற பந்தை விடுப்புப் பாத்துக்கொண்டு நிக்கிறான்” என்று பார்த்தால்... அய்யய்யோ பந்து காத்து இழுத்து என்னை நோக்கு பறந்து வந்துகொண்டிருக்கிறது... எல்லைக்கோட்டில் எனக்கு பக்கத்தில் யாழ் இந்து அணியும், பயிற்சியாளர்களும்... “விட்டிடுவான், விட்டிடுவான்” என்கிற சத்தம் காதுக்கு கேட்கிறது, உண்மையில் அவ்வளவு உயரமாக எழுந்த பந்து, “அடேய் அதைத்தாண்டா நானும் நினைக்கிறன்" என்பது  அவர்களுக்கு புரிந்ததோ என்னன்னவோ...! இறுதியில்  நான் பந்தைப் பிடிக்கவில்லை, பந்துதான் என்னைப்  பிடித்தது என்பது போல கைக்குள் பந்து சரணடைந்து கிடந்தது...! 0/2  dream start for a  bowling side, அதுவும் semifinal. 48/8 in a stage & 96 all out.  


நாங்களும் சளைத்தவர்களில்லை, 0/1 குமணன், அந்த சீரிஸில் வைத்தால் குடும்பி, அடித்தால் மொட்டை பட்ஸ்மன், ஒன்றில் 0, இல்லை என்றால் 50+ என போய்க்கொண்டிருந்தவன் முதல் ஓவரிலேயே வெளியே வந்துகொண்டிருந்தான். சைலேஷ்.. யாழ் இந்துவின் இடதுகை சகலதுறை வீரன். இடது கை பந்து வீச்சாளர்களுக்கு பந்துவீச்சில் natural swing இருக்கும், இவனுக்கு அது சற்று அதிகமாகவே இருக்கும்.  வழமைபோல சரியாக தீர்ப்புச் சொன்ன அம்பயர் மேல் குற்றம் சொல்லிவிட்டு குமணா வந்து அமர, நானோ பதட்டத்தில்  ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் போய்விட்டேன்... அடுத்தடுத்த பந்துகள் சுவரில்  வந்து சடார் புடார் என தாக்கிக்கொண்டிருந்தது. விஷ்ணுவர்தன்... இடதுகை துடுப்பாட்ட வீரன். மிகைப்படுத்திச் சொல்லவில்லை, போட்டிகளில் இவன் சாதித்தது குறைவு, ஆனால் இப்போதும்  சொல்வேன் எனக்கு பிடித்த Left handed batsman in Jaffna விஷ்ணுதான். சின்ன வயசில யூனிவெர்சிற்றிக்கு விளையாடும்போது கொக்குவில் ஹிண்டு கொலிஜ் மைதானத்தில்  left handed வரதன் அண்ணாவின் பட்டிங் பார்த்திருக்கிறேன். அந்த legend ஐ விஷ்ணு எனக்கு எப்போதும் ஞாபகப்படுத்துவான். அன்று விஷ்ணுவின் நாள்... 60+ அவன் ஸ்கோர் பண்ணியிருக்கவேண்டும்... gem innings. இலகுவான  வெற்றியாக அமைந்தது. எனக்கு இந்த மச்சில் ஒரு சந்தோசமானவிடயம் highest score of mine 43* - செத்த பாம்மை வைத்து அடித்து விளையாடுவதுபோல, அவர்கள் தோற்றபின் அடித்த இன்னிங்ஸ். 


Final -   vs  St. Patrick's College

முதல் வருடம் எங்கள்  மைதானத்தில் வைத்து இறுதிப்போட்டியில் எம்மை போட்டு பிளந்துவிட்டுப் போன அதே அணி. அந்தப்போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து தவிர்க்க ஆஸ்கார் லெவலுக்கு  இஞ்சரி நடிப்பு நடித்த டிலான்தான் இந்த ஆண்டு எமது அணித்தலைவர். டிலான் பற்றி சொல்வதென்றால் practice can make a ordinary batsman to good  batsman என்பதற்கு ஒரு  உதாரணம். ஆரம்பத்தில் பந்தைக் கண்டு பதட்டமாகும் சுபாத்தை டிலானிடம் கண்டிருக்கிறேன்.. பின்னர் சீசன் முடியும் நேரத்தில் he made him as a good batsman. காரணம் ஒவ்வொரு Practice time மும் he improved a lot. ஆனால் டிலானின் அடையாளம் leg spinner. proper right arm wrist spinner with very control variation (googly)


பற்றிக்ஸ் துடிப்பாடிக் கொண்டிருக்கிறது, 150+ ஓட்டங்களுக்கு 7 விக்கட். பிரஷாந்தா...... எங்களது காலத்தின் ஒரு தலை  சிறந்த பற்ஸ்மன் (பந்துவீச்சாளர் கூட) அரைசதம் கடந்து ஆடிக்கொண்டிருந்த பிரசாந்தாவின் விக்கட் எனது கிறுக்குத்தனமான ஒரு பந்துக்கு சரிவதோடு அன்றைய முதல்நாள் ஆட்டம் முடிவடைகிறது. எனக்கு மற்றவர்களை இமிட்டேட் செய்து பந்துவீசுவது பிடிக்கும், டரன் கஃப், அக்தர் என்று என்னை நானே சொல்லி பந்துபோடுவது அப்பப்போ ப்ராக்டிஸில் கிறுக்குத்தனமாக செய்வது....!  அன்றைய  இறுதி ஓவரில் பிரின்சிப்பல் பங்களோ  எல்லையில் இருந்து அக்தர் போல ஓடி வந்துகொண்டிருந்தேன், பிரஷாந்தா இவன் என்னடா கோமாளி எண்டு நிச்சயம் நினைத்திருப்பார்... வழமையைவிட சற்று வேகம் அதிகமானதால் just he missed the ball & bowled himself. 


மறுநாள் 170+ டாக்கெட்டை நோக்கி போராடிக் கொண்டிருக்கிறோம்... regular interval இல் விக்கட் சரிந்துகொண்டிருக்கிறது. ஒரு பக்கத்தில் ராஜாராம். வழக்கமாக அதிகநேரம் மைதானத்தில் மினக்கெட்டாத பையன்.  ராஜாராம் அன்று ஜெய்ஸ்ரீராம்  துணையுடன்  anger ரோல் செய்துகொன்றிருக்கிறார். அப்பப்போ அம்பயரின் கண்களையும், களத்தடுப்பாளர் கைகளையும் ஒரு சக்தி ராஜாராமுக்காகவும் எமக்காகவும் குழப்பிவிட்டுக்கொண்டிருந்தது. தனது செஞ்சரியை தவறவிட்டு 90 களில் ஆட்டமிழந்தாலும்; மறக்க முடியாத, நாம் நன்றி சொல்லக்  கடமைப்பட்ட ஒரு இன்னிங்ஸ் அது, ஏனென்றால் அந்த இன்னிங்ஸ் மட்டும் இல்லை என்றால் அன்றைய எமது  அனுராதபுரப் பயணமும் இல்லை, இந்தப் பதிவும் இல்லை.  


ஆனால்   எனக்கு மைதானத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது, நான் மச் பார்க்கவே இல்லை, அவ்வளவு பதட்டம். மைதானத்துக்கு அருகில் இருந்த வகுப்பறையில் என் பேஸுக்குள் இருந்த பிள்ளையார் படத்தை நிமிடத்துக்கொரு தடவை எடுத்துக் கும்பிட்டுக்கொண்டிருக்கிறேன். நம்பினால் நம்புங்கள் 21 வருடங்கள் கழிந்துவிட்டது, எத்தனையோ பேர்ஸ் மாறிவிட்டது, ஆனால் அந்தப் பிள்ளையார் படம் இப்போதும் என் பேர்ஸில் உள்ளது... காரணம் இந்த மச்தான். விபரம் தெரிந்த நாட்களில் இருந்து கொழும்பை அறியாமல் இருந்த எமக்கு இந்தப் போட்டியில் ஜெயித்தால் கொழும்புக்கு போகப்போகிறோம் என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. 


ஆனால் ஏழு விக்கட் போய்விட்டது, அடுத்த விக்கட் போனால் உள்ளே நான் போகவேண்டும், எனக்கு அடுத்தது காண்டி..! எங்களது விக்கட்டில்  ஒன்று போய் பட்ஸ்மான் போல்காட் கழட்டி வைப்பதற்குள் காண்டி  பின்னால் வந்து நின்று ஹாய் சொல்லும் அளவுக்கு batting இல் கலக்குவான்...! but he is a very good finger spinner. 30 ரன்ஸ்களுக்கு மேல் தேவை...  ராகுலன், பிரியந்தாவில் ஒருவர் போனாலே மச் தோல்வி, காரணம் எனதும், காண்டியினதும் capacity எனக்கு நன்றாகவே தெரியும். நான் நினைக்கிறேன் ப்ரியந்தாவுக்கு under presure என்றால் என்னவென்பதே தெரியாதென்று..! அந்த சூழ்நிலையில் நானெல்லாம் defend ஐ தவிர வேறேதும் நினைக்ககூட மாட்டேன், ஆனால் இவனோ சுழட்டி சுழட்டி அடிக்கிறான்...! சென்ரல் மச் எப்படி அசால்டாக இறங்கிவந்து அடித்த சிக் என் கண்ணுக்குள் நிற்கிறதோ; அதேபோல  இந்தப் போட்டியில் ஸ்பின்னருக்கு திரும்பி அடித்த பவுண்ரியும் கண்ணுக்குள் நிற்கிறது....! yes we are the District champions of 1999 - Under 17


சந்தோசத்திற்கு அளவில்லை... வெற்றி ஒரு பக்கம்... கொழும்புக்குப் போகப்போகிறோம் என்கிற சந்தோஷமோ எல்லை கடந்த  மகிழ்ச்சி... ஆனால்... நாம் கொழும்புக்குப் போகப்போவதில்லை... எமக்கான போட்டிகள் இரண்டும் அனுராதபுரம் மற்றும் குருநாகலில் என்பதால் நாம் அனுராதபுரம் போகப்போகிறோம் என்பது  தெரிந்தது....! கொழும்பு இல்லை என்கிற ஏமாற்றம் இருந்தாலும்; சரி அனுராதபுரமாவது  பறுவாயில்லை என்கிற அளவுக்கு மனதை தேற்றிக்கொண்டோம்...! ஆனால் அப்போது எனக்கு தெரியவில்லை பின்னாட்களில் அனுராதபுரம் எனக்கு மனதுக்கு நெருக்கமான இலங்கையின் மாவட்டமாகப்போகிறதென்பது....!


அனுராதபுர பயணம் .தொடரும்..!

Monday, 18 May 2020

மட்டக்களப்பின் முதல் தடம்... (இரண்டாம் / இறுதி பகுதி)




கொழும்பு மட்டக்களப்பை இணைக்கும் அழகிய A4 வீதியால் கையஸ் பறக்கிறது. வயிறு அடுத்த களம்காண தயாராகிக் கொண்டிருந்தது, களமோ பாய் வீட்டு புரியாணி; இரப்பையை உரப்பையாக்கி நிரப்பாமல் திரும்பும் பழக்கம் எம்மில் எவருக்கும் இல்லை. 

கூகிள் மப்; எனக்கு மிக மிக பிடித்த அப்ளிகேஷன். இலங்கையில் கூகிள் மப் உதவியுன் நான் போட்ட முப்பத்திரண்டு சுற்றுலா திட்டங்களில் மூன்றாவது கூட இன்னும் ஆரம்பிக்காவிட்டாலும் கூகிள் மப் மூலம் இலங்கையை சுற்றிவருவதையும் புதுப்புது திட்டங்களை போடுவதையும் நான் நிறுத்துவதில்லை.

ஆனால் அன்று கூகிள் மப் எங்களை காத்தான்குடியின் மூத்திர சந்தெல்லாம் சுற்றிப்பார்க்க வைத்தது. சவுங்கங் காட்டில் இருந்து புறப்பட்ட நாம் ரம்ஸீன் சொன்ன வழியை சரியாக உள்வாங்காததால்; இருக்கவே இருக்கான் நம்மாளுன்னு Google Map ஐ on பண்ணினால் அது மப்பு தலைக்கேறியவன் கணக்காக விளையாட்டைக் காட்டியது. turn left ல் கூடவர ஆரம்பித்த சனி ஒரு வழியாக அரைமணிநேர அலைச்சலின்பின் ஞாயிறு மதியம் 1.45 க்கெல்லாம் மண்டபத்தில்த்தான் இறக்கிவிட்டது. அதன் பிறகு சுக்கிர ஜோகம் ஆரம்பித்தது.

மாப்பிள்ளை சும்மா ஜிகு ஜிகுன்னு மின்னினார். விருந்து தடல்புடலாக களைகட்டிக்கொண்டிருக்க எமக்கு நல்ல வரவேற்போடு நேராக சேரவேண்டிய இடத்திற்கு சேர்த்தார்கள். எனக்கு இதுதான் முதல் முஸ்லிம் நிக்கா, நிக்கா முதல்நாள் முடிந்து அன்று விருந்து, வலீமா என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன். அவர்களது கலாச்சாரம் புது அனுபவமாக இருந்தது.

புரியாணி, சிக்கன் ப்ரை, மட்டன், முட்டை, அச்சாறு என சஹான் சாப்பாட்டை உருத்தெரியாமல் சிதைத்துவிட்டு வெளியே தென்னை மரநிழலில் வந்தமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அந்த பரபரப்பிலும் ரம்ஸீன் எம்மோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

2.30 கடந்த பின்னர் குழுவாக புகைப்படம் எடுத்தபின்னர் விடைபெற்று புறப்பட்டோம். வயிறு முட்ட தீனி, தண்ணீர் விடாய் பயங்கரமாக இருந்தாலும் சோடா குடிக்கவேண்டும் என்றே அனைத்து நாக்குகளும் கோரஸ் பாடின. ஒரு கடையில் வாகனம் நிறுந்தப்பட்டு ஸ்பிரைட் 2லீட்டர் சோடாக்கள் இரண்டு வாங்கியபின் வாகனம் மீண்டும் புறப்பட முன்னமே ஒன்றரை போத்தல் ஸ்பிரைட் காலி.

காத்தான்குடி மியூசியம்; ரம்ஸீன் சிபாரிசு செய்ததாலும், அங்கு அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோமே என்கிற எண்ணத்திலும் ஆளுக்கு 50 ரூபா டிக்கெட்டில் உள்ளே போனோம்; ஓரிருவர் வராமல் அசதியில் வாகனத்தில் தூங்கப்போகிறோம் என்று இருந்துவிட்டார்கள்.

உள் நுழைந்ததும் நேரே ஹிஸ்புல்லா ஹிஸ்ரி, யோக்கிரஃபி, சயன்ஸ் சாதனைகள் பற்றி ஒரு பெரிய சுவர்ப்பலகை கட்டுரை. கீழ்த்தளம் முழுவதும் 4ம், 6ம், 8ம் நூற்றாண்டு பொருட்கள் என்று கோப்பைகள், ஜொக்குகள், பித்தளை மூக்குப் பேணிகள், பெற்றோள்மக்ஸ் லைட் என்று நாம் முன்னாடி கண்ணாடி பின்னாடி அடுக்கப்பட்ட பொருட்கள்.

"பழைய இரும்பு, பிளாஸ்டிக் சாமானுகள், பழைய இரும்பு, பிளாஸ்டிக் சாமானுகள்" என்று முன்னர் ஊரில் கேட்ட சைக்கிள் பழைய பொருட்களை வாங்குபவர் சத்தம்; அவர் குரல், மாடிலேஷனோடு ஞாபகம் வந்ததை தவிர்க்க முடியவில்லை. சரி இவ்ளோதானா? பேசாமல் போகலாமா என்று நினைத்தாலும்; வந்ததும் வந்துவிட்டோம் மேலே போய் பார்ப்போம் என்று போனால் Worth.

முன் நூற்றாண்டு காலங்களில் இலங்கையில் சோனக சமூகம் வாழ்ந்த வாழ்க்கை முறையை அத்தனை தத்ரூபமாக உருவங்கள் மூலம் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். கப்பல் வணிகம், அரச சபையில் மந்திரிகள், பலசரக்கு கடை, மரக்கறிகள் கடை, விவசாய செய்கை, கொல்லன் பட்டறை முதற்கொண்டு பல தொழில்களையும் அத்தனை உயிர்ப்போடு காண்பித்திருப்பார்கள், அதிலும் லைட்டிங் எல்லாம் அபாரம்.

எனக்கு அவற்றில் மனதில் மிகவும் பதிந்தது ஒரு வீட்டில் வசிக்கும் குடும்பத்தின் ஆக்கம். வாப்பா சாய்மனை கதிரையில் இருந்து பத்திரிகை படிக்கிறார், மகன் அருகில் கீழே இருந்து துவா செய்கிறான். அம்மா மரக்கறிகள் வெட்டுகிறார், சிறிய மகள் படுத்திருந்து புத்தகம் படிக்கிறாள். சமையல் கட்டு, மரக்கறிகள், வராந்தா, அன்றைய ரேடியோ என ப்ப்ப்பா அத்தனை தத்ரூபம். ஹிஸ்புல்லா பற்றிய சுவர்ப்பலகை கட்டுரையை மேல்தட்டு மியூசியம் நியாயம் செய்துவிட்டது.

ஓய்வெடுக்க எல்லாம் நேரமில்லை, மறுநாள் காலையில் கல்லடியை காலிசெய்து கிளம்பி ஆகவேண்டும். எமது குழுவில் ஒருவரான ஜனனனின் அண்ணனும் என் பாடசாலை நெருங்கிய தோழனுமான கோபிநாத் மட்டக்களப்பில் திருமணம் செய்திருந்தார். அவர்களது வீட்டிற்கு ஒரு விசிட் அடித்துவிட்டு அவனையும் அழைத்துச் கொண்டு செல்வது என்பது ப்ளான்.

மட்டக்களப்பு நகரினுள் நுழைந்து விட்டோம். யுத்த வடுக்களை கட்டடங்களில் அறியாமல் இருந்ததாலும், அரச கட்டுப்பாட்டில் முழுமையாக இருந்ததாலும் வடகிழக்கு மாவட்டங்களின் நகரங்களில் மட்டக்களப்பு அழகான நகராக இருந்தது. வாவியின் நடுவே பெரிய வீதிகள், ரவுண்ட போட்கள் என மட்டக்களப்பு நகர் உள்ளே அழைத்தது.

என்னதான் ஸ்பிரைட்டை உள்ளே இறக்கியிருந்தாலும் புரியாணியும் சகாக்களும் செமிக்க பஞ்சிப்பட்டு இரப்பையில் டேரா போட்டு ப்ரன்ஸ் படத்து சூர்யா சுவரை துடைத்தது போல செமிபாட்டு வேலையை செய்துகொண்டிருந்தன. அந்த நேரத்தில் கோபிநாத் வீட்டில் தந்த இஞ்சி பிளேன்டி கொன்றாக்ரர் நேசமணி போல வந்து "மெல்ல மெல்ல, ஏன்னா புரியாணிக்கு வலிக்கும் பாரு" என சடபுடவென செமிக்க செய்யத் தொடங்கியிருந்தது. அருமையான ப்ளேன்டியுடன் அங்கிருந்து கிளம்பினோம்.

மட்டக்களப்பை மீன்பாடும் தேன் நாடு என்ற சொல்வர், அதற்கு காரணம் அந்த கடல்களின் மீன்வளம். ஆனால் மட்டக்களப்பு நகரின் முக்கிய இடங்களை தன்னகத்தே கொண்ட சிறு தீவுதான் புளியந்தீவு. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இதன் தோற்றம் அப்படியே அச்சு அசல் மீனைப் போல இருக்கும். அதிலும் மீனின் கண் இருக்க வேண்டிய இடத்தில் போர்த்துக்கேயர் 1600 களில் கட்டிய பாதுகாப்பு கோட்டை காணப்படுகிறது.

யானைக்கும் அடி சறுக்கும் போது சுவேந்திரனுக்கு சறுக்கக் கூடாதா? கச்சேரியில் வேலை என்பதை வைத்து அண்ணன் கச்சேரி வாசிச்சு கச்சிதமா சாதித்த நாட்கள் ஏராளம். மட்டக்களப்பு கச்சேரி வாசலில் வாகனம் வரவும் செக்கியூரிட்டி மறித்தார். நாம் அருகில் பாக் பண்ணிவிட்டு போவோம் என்று சொன்னதை கேட்காமல் உள்ளே வாகனத்தை செலுத்தியவருக்கு ஈகோ தட்டியது.

யாழ்ப்பாண கச்சேரி அதிகாரியை மட்டக்களப்பு வாயிற் காவலன் மறிப்பதா? ஐயகோ...! எங்கட கச்சேரி சேர் விடுவாரா! தம்பி நான் யாழ்ப்பாண கச்சேரி DO என்று நங்கூரம் போல நச்சென்று வார்த்தையை போட்டான் நம்ம தல. பரவாயில்லை, யாராக இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை என்ன வேலை? என்று பதில் வரவும் அசடு நாலு லீட்டர் மொகரக்கட்டையில் வழிய வழிய வாகனத்தை ரிவஸ் போட்டார் நம் ஆபீசர்.

நான்கு மணிக்கெல்லாம் கோட்டை சுவர்களின் அருகில் நின்று ஆடியசையும் வாவி மகளை பார்த்து பிரம்மித்து போயிருக்கும் நேரத்தில்; மீன் மகள் கிடைத்திருக்கிறாள், இரவு ப்ரையா? டெவலா? என விடுதி ஐயாவுடன் தல சுவேந்திரன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். என்ன அழகு..! மட்டு நகர் அழகான மேடையம்மா, எட்டு திசையும் கலையின் வாடையம்மா என்கின்ற காசி ஆனந்தன் வரிகள் எத்தனை உண்மை!!

மட்டக்களப்பு லைட் ஹவுஸ் வர அடுத்த ஆட்டம் ஆரம்பமாகியது. மட்டக்களப்பு வந்துவிட்டு வாவியில் பயணிக்காமல் போவது; மாப்பிள்ளை  மணவறை வந்துவிட்டு தாலி கட்டாமல் போவது போலாகிவிடுமல்லவா? ஒரு இயந்திர படகில் பேரம்பேசி ஏறியமர்ந்தோம். நானும் ரூபனும் தவிர வேறு யாரும் லைஃப் ஜாக்கெட் போட்ட ஞாபகம் இல்லை.

வாவ்வ்வ்... எத்தனை அழகான அனுபவம். நண்பர்கள், படகு பயணம், அழகான இயற்கை என மறக்க முடியாத நிமிடங்கள். ரூபனுக்கு கண் பார்வை எல்லோரையும் விட நிறையவே அதிகம். "அங்க பார் முதலை" என்றான். வாவியில் இடையிடையே சிறுசிறு திட்டுக்களில் மரங்கள் பற்றைகள் காணப்படும். அப்படி ஒரு திட்டின் கரை நிலப்பகுதியில் முதலை. ஓரிருவர் கண்டுவிட்டோம், மற்றவர்கள் காணவில்லை.

ஓர் நீர்க் கரைப்பகுதியை அடைந்து திரும்பும்போது படகு நின்றுவிட்டது. ஆகா.. செந்தில் கவுண்டமணிக்கு ஒஃபர் பண்ணிய நடுக்கடலில் கப்பல் நின்று தானாக சரியாகாவிட்டால் இறங்கி தள்ளும் வேலையாளுக்கு வேலை வந்துவிடுமோ என்றிருக்க படகு இஞ்சின் இயங்க தொடங்கியது. கரையை அண்மித்ததால் மண்ணில் தட்டி படகு நின்றிருந்தது. இப்போது மீண்டும் பயணம் ஆரம்பித்திருந்தது, அழகான மாலைப் பொழுது அஸ்தமனம் நோக்கி நகர நாமும் கோபிநாத்தை வீட்டில் விட்டுவிட்டு விடுதிக்கு திரும்ப தயாரானோம்.

இரவு பார்ட்டிக்கு 'பச்சைத் தண்ணீர்' வாங்கிய பின் சாப்பிடு வாங்க ஹாஜியார் கடையை ரம்ஸீன் சிபாரிசு செய்திருந்தாலும்; முதல் நாள் கொடுத்த திருப்தியால் இப்ராஹிம் ஹோட்டலில் வாகனத்தை இம்முறையும் நிறுத்தி இடியாப்பம், சம்பல், பருப்பு என தேவைக்கு அதிகமாகவே பாசல் செய்துகொண்டு விடுதி திரும்ப இரவு 9 மணியாகியிருந்தது. சுவேந்திரன் தொலைபேசி ஓஃப் ஆகி இருந்ததால் விடுதி ஐயா மீன், இரால். போன்றவற்றை வாங்கி வைத்துவிட்டு காத்துக்கொண்டிருந்தார்; நேரம் பிந்திய கடுப்புடன்.

அரக்குடன் அரக்குலா மீன் பொரியல். இரவுக்கு இடியப்பமும் இரால் பொரியலும். என்னதான் பைட்ஸாக மீன், இரால், முட்டை இருந்தாலும்; சுமந்திரனும், விக்னேஸ்வரனும், டக்ளசும், கருணாவும், கஜேந்திரகுமாரும், My 3 யும் என செம பைட்ஸோடு பெக்குகள் உள்ளே போய்க்கொண்டிருந்தது. பைட்ஸ் அதிகமாக இருந்ததும், போதையும் சிலருக்கு அதிகமாகியிருந்ததாலும் இடியப்பம் பெரியளவில் இறங்கவில்லை. மறுநாள் நாய்களுக்கு அதிகாலையில் நல்ல தீனி.

விடிந்துவிட்டது, புறப்பட வேண்டும். நாம் எழுந்து வருவதற்கு முன்பே தல எழுந்து வந்து விடுதி ஐயாவுடன் பேசிக் கொண்டிருந்தான். தன்னைப் பற்றி நிறைய பில்டப் பண்ணி இருக்கவேண்டும். நித்திரையிலிருந்து எழுந்து வந்த நானோ "சொட்டை ரெடியா" என்று கேட்டதுதான் தாமதம் தலயின் முகத்தில் அத்தனை கோரமான கோபம். அந்த ஐயாவேறு பக்கத்தில் நின்று திரும்பி பார்த்துக் கொண்டிருந்தார்.

என் வயசுக்கும், பொஷிசனுக்கும் உங்களோட இறங்கி வந்து பழகினதுக்கு எவளவு பண்ண முடியுமோ அத பண்ணீட்டீங்க என்பதுபோலத்தான் தல ரியாக்க்ஷன் இருந்தது. எங்களுக்குள்ள வச்சு எவ்ளோ பேசினாலும் தாங்கிக்கொள்ளும் கங்கா முகத்தில இன்னொருத்தர் முன்னால சந்திரமுகிய வர வச்சது என் தவறுதான். காவலன் படத்தில் வடிவேலு "பாஸ் என்னை தனிய கொண்டுபோய் வச்சு கிழி கிழின்னு கிழிங்க, மனப்பூர்வமா ஏத்துக்கிறன்; ஆனா இப்பிடி பொம்பிளை பிள்ளைகளுக்கு முன்னால கேவலமா பேசினீங்க உங்களுக்கும் எனக்கும் இருக்கிற அன்யோன்யம் கெட்டுப்போகும்" என்கிற டயலாக் இந்த சிட்டிவேஷனில் நன்கு பொருந்தியது.

தொடர்ந்து அந்த ஐயா தங்களது சுனாமி அனுபவங்களை கூறத்தொடங்கினார். இந்த விடுதி அவரது மகனுடன் சேர்ந்து அவர்தான் இயக்குகிறார். முதல்நாள் இரவு பைட்ஸ் சமையல்கூட இவர்தான். நல்ல இனிமையான பேச்சுக்கும் உபசரிப்புக்கும் சொந்தக்காரர். தலயும் ஓரளவுக்கு கூல் ஆகியிருந்தது.

மீண்டும் நானே சனியனை தூக்கி பனியனுள் போட்டுக்கொண்டேன். தல யோகாசனத்தில் பலே கில்லாடி, யோகாசனம் மட்டுமல்ல சித்திரம், கைவேலை, விவசாயம், வாகனம், பட்மின்டன், தடகளம் மற்றும் வெடி என பலதிறனில் பலே கில்லாடி. "தல இவங்களுக்கு peacock ஆசனம் செய்து காட்டு தல" என்று கேட்க; தல ஆசனத்துக்கு முயற்சி செய்ய தொடையில் பயங்கரமான நரம்பு பிடிப்பு ஏற்பட்டு வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தது; அதனால் மீண்டும் கடுப்பில் சுத்த தொடங்கியது.

அனைவரும் தயார்... விடுதி ஐயாவுடன் புகைப்படம் எடுத்துவிட்டு வாகனத்தை ஸ்டார்ட் செய்தால் வாகனம் ஸ்டார்ட் ஆகவில்லை. பற்றரி அவுட் போல என டெக்நிக்கல் அறிவுள்ள நண்பர்கள் பேசிக்கொண்டார்கள். வாகனத்தை ஒழுங்கு செய்திருந்த எம்முடன் வந்தவர்களில் ஒருவரான ரூபனின் நெருங்கிய நண்பர் சுகு வாகன உரிமையாளரிடம் தொலைபேசியில் கேட்டு முன் சீற்றை உயர்த்தி ஏதோ செய்தபின் வாகனம் ஸ்டார்ட் ஆகியது.

மாமாங்கப் பிள்ளையார்... மட்டக்களப்பின் பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயில். காலை நேரம் பிள்ளையாரை கும்பிட்டுவிட்டு சாப்பாட்டை முடித்துக் கொண்டு பாசிக்குடா கடலில் குளித்து விட்டு அப்படியே ஊர் திரும்புவது திட்டம். கோயில் அத்தனை அமைதியாக தெய்வீகமாக இருந்தது. மீண்டும் ஒரு ஆன்மா லயப்படும் ஆலயத்தை தொழுத பின்னர் அருகில் இருந்த தீர்த்த குளத்துக்கட்டில் இருந்தோம்.

மீண்டும் பாம்புக் கண் ரூபனுக்கு முதலை தெரிந்தது; ஆனால் வேறு ஒருவருக்கும் தெரியவில்லை. பல நிமிடங்களாக முதலையை பல வழிகளில் காண்பித்தும் யாரும் காணவில்லை. அவன் முதலை இருக்கும் திசைக்கு கல் எறிந்து காட்டியும் பயனில்லை. புறப்படும் நேரம் நெருங்கியது, யாரும் காணாவிட்டால் தான் சொன்னது பொய்யாகிவிடும் என்கிற பதட்டம் அவன் முகத்தில் சதிராடியது. அவன் அதிஷ்டம் நானும் கண்டுவிட்டேன், பின்னர் இருவரும் சேர்ந்து ஒருவழியாக மற்ற ஓரிருவரும் கண்டுவிட்டார்கள். அதன் பின்னர்தான் இலகுவான வழி தெரிந்தது, கமெராவில் ஸூம் செய்து போட்டோவாக மற்றவர்களுக்கு காண்பித்தோம். இதை முதலை ரூபன் செய்திருக்கலாமே என்று இதை எழுதும் போதுதான் தோன்றியது; ஆக அப்போது யாருக்கும் தோன்றாதது தவறில்லை.

கோவில் கிணற்றில் தண்ணீர் குடித்து விட்டு போகலாம் என கிணற்றில் நீர் அள்ளும் போது ரம்ஸீனின் தொலைபேசி அழைப்பு வருகிறது. "போக முதல் வீட்ட வந்திட்டு போங்கோ, அவளவு தூரம் இருந்து வந்தவங்களை வீட்ட கூப்பிடாம இருக்கிறதாண்டு வாப்பா ஏசிட்டு இருக்கார், எல்லாரும் வாங்கோ" என ரம்ஸீன் சொல்ல; நாமோ " பரவாயில்லை நீங்க கல்யாண பிசிதானே, நாங்க வெளிக்கிட்டு மாமாங்கம் வரை வந்திட்டம், இன்னும் ஒரு தடவை வருவம்" என்று சொன்னாலும் ரம்ஸீன் விடுவதாக இல்லை.

மீண்டும் வாகனம் திரும்பியது. முதல்நாள் வலுமா முடிய மாப்பு கதகளி ஆடிய களைப்பில் தூக்கத்தில் இருப்பார், குழப்ப வேண்டாம் என்று ரம்ஸீனிடம் சொல்லாமல் கிழம்பியிருந்தோம். ஆனால் ரம்ஸீன் விடுதாக இல்லை, ரம்ஸீனைவிட ரம்ஸீனின் வாப்பா விடுவதாக இல்லை. அவருக்கு யாழ்ப்பாணத்தில் ரம்ஸீன் எங்களுடன் நட்பில் இருந்தது Something secured ஆக feel பண்ணி இருக்கிறார் போலுள்ளது வராமல் போக விடவே மாட்டேன் என ரம்ஸீனிடம் கராராக இருந்திருக்கிறார்.

சாதாரணமாகவே ஊருக்கு போய் வரும் நாட்களில் ரம்ஸீன் கொண்டுவந்து தரும்; வீட்டில் உம்மா செய்த வட்டிலப்பத்தின் சுவை எனக்கு பரிச்சியமாக இருந்ததால் ரம்ஸீன் தொலைபேசியில் சொன்ன ஆட்டுக் குடல் பாபத் மீது செம நம்பிக்கை இருந்தது. இடியாப்பமா பரோட்டாவா என்கிற சொய்சில் இடியப்பம் தோற்றுப் போனதால் சுடச்சுட பரோட்டா தயாராக எமக்காக காத்திருந்து.

காத்தான்குடி பழக்கடைகளில் சில பழங்களை வாங்கிக்கொண்டிருக்க ரம்ஸீனும் அவ்விடம் வந்துவிட்டார். ரம்ஸீன் வழிகாட்ட காத்தான்குடி வீதியில் இருந்து ஒரு ஒழுங்கை ஊடாக ரம்ஸீன் வீட்டை வந்து சேர்ந்துவிட்டோம்.

வரவேற்பின் பின் உடனடியாக சாப்பிட தயாராகிவிட்டோம். பரோட்டா, சம்பல், அதென்ன உருளைக் கிழங்குக்குள் பயிற்றங்காய் போட்ட கறியா? ஓ.. இதுதான் ஆட்டுக்குடல் பாபத்தா? முதல்முறை காண்கிறேன், முதல் தடவை சுவைக்கிறேன். ப்ப்ப்பா என்ன ஒரு காலை உணவு, மாமாங்க பிள்ளையார் தான் வெஜ்சாக இருந்தாலும் நொன்வெஜ் வெறியர்கள் எமை கைவிடவில்லை.

முதலை ரூபமாக ரூபனுக்கு காட்சி கொடுத்து 20 நிமிடங்கள் எம்மை அங்கு நிறுத்தியிருக்காவிட்டால் நிறைய தூரம் போயிருப்போம், திரும்ப வர சாத்தியம் இல்லாமல் போயிருக்கும். அன்று சதுர்த்தி வேறு என்பதால் எமக்காக சேர்த்து தல சுவேந்திரன் மதியம் வரை பச்சைதண்ணி பல்லில் படாமல் விரதம் இருந்தார், நாமோ ரம்ஸீன் வீட்டுக் காரருக்குகூட மிச்சம் வைக்காமல் ஆட்டு பாபத்தை பதம்பார்த்துக் கொண்டிருந்தோம். சுடு பரோட்டா சம்பல் என்றாலே அந்த லெவலில் டீல் பண்ணுவோம், இதில் அந்தமாதிரி சுவையில் பாபத் வேறு... சொல்லவா வேண்டும்...!

சாப்பாடு முடிய சோபாவில் இளைப்பாறிய எம்முடன் ரம்ஸீனும் பேசிக் கொண்டிருக்க இஞ்சி பிளேன்டீ வந்தது. எம்மைப் பற்றி கூடவே திரிந்த செவ்வாளைக்கு தெரியாதா என்ன? ரம்ஸீன் வீட்டில் ஒரு கறுவா மரம் இருக்கிறது, அந்த மரத்தின் இலைகளையும் கொண்டு போட்டதால் ப்ளேன்டி மறக்கமுடியாத சுவையையும் மணத்தையும் நாக்கிலும் மூக்கிலும் ஒட்டிவிட்டது. இதையே ஒரு கடையில் நாம் குடித்திருந்தால் டீ மாஸ்டர் பிளேன்டி போட்டே செத்திருப்பார்.

ரம்ஸீன், வாப்பா, உம்மா என அனைவரும் வாசல் வரை வந்து வழியனுப்பியது உண்மையில் மனதுக்கு மகிழ்வாகவும் something emotional ஆகவும் இருந்தது. நன்றி ரம்ஸீன் & குடும்பத்தினர்.

நேராக பாசிக்குடா நோக்கி பறந்தது வாகனம், விரதத்தோடும் சுவேந்திரன் விறைப்பாக ஓடிக்கொண்டிருந்தான்.  சுரேந்திரன் பற்றி எழுதும்போது 'ன்' போடுவதா 'ர்' போடுவதா என்று யோசித்து பார்த்தேன் 'ன்' தான் யதார்த்தமாக பொருந்துகிறது 😋. பாசிக்குடா எனக்கு பெரிய பிரமிப்பாக இருக்கவில்லை, சில மாதங்களுக்கு முன் திருகோணமலை மாபிள் பீச் போனதால்கூட இருக்கலாம். அல்லது அங்கு ஹோட்டலில் தங்கி, ரெஸ்ரோரன்ஸில் உண்டு என முழுமையாக ஒருநாளேனும் இருந்திருந்தால் பிரமிப்பாக இருந்துமிருக்கலாம்.

இலங்கையின் கிழக்கே இந்து சமுத்திரத்தில் பாசிக்குடா பகுதியில் நிலப்பரப்பில் 'ப' போன்ற பகுதியில் ஊடறுத்த நீர்ப்பரப்பே பாசிக்குடா பீச். அலைகள் இல்லாத / குறைவான குளிக்க பாதுகாப்பான கடல். ஆளத்தின் மட்டத்தினை உணர்த்த பாதுகாப்பு கயிறுகள் கட்டப்பட்டிருந்தன. கடற்குளியல் யாருக்குத்தான் பிடிக்காது? இரண்டு மணி நேரக் குளியல், கூடவே 4 ஆண்டுகள் ஆபிரிக்க நாடுகளில் (உகாண்டா என்று நினைக்கிறேன்) நின்று வந்த அனுபவத்தை, ஆபிரிக்க ராணிகளின் அதகளங்களை அபிராம் அலுக்காமல் கிளுகிளுப்பாக கூறியதை கேட்டுக் கேட்டு குறித்தது மறக்கமுடியாத அனுபவம்.

குளித்து முடிந்தாலும் பசியில்லை, ரொட்டியும் பாபத்தும் இரப்பையில் இருந்து இறங்கவில்லை. அங்கிருந்த சிறிய பெட்டி டீக்கடையில் சிலபல பிளேன்டிகளுடன் கிழக்கு ரொட்டி, வடை என லைட்டாக முடித்துக் கொண்டு வாகனம் கிளம்பியது. திருகோணமலை பாதை ஊடாக வந்த வான் இப்போது நாவலடிச் சந்தியால் மேற்காக திரும்பி பொலனறுவை பாதையூடாக போய்க்கொண்டிருந்தது.

நான்கு மணி கடந்திருந்திருக்கும், இடையிலே ஓரிடத்தில் சிலர் வாகனத்தில் இருந்து இறங்கி நின்று எதையோ பார்த்துக் கொண்டு இருந்தார்கள். எமது வாகனமும் இடப்பக்க இன்டிக்கேட்டரை போட்டு சைட் பண்ணி நிறுத்தப்பட்டது. பெரிய வெளியொன்றில் பென்னாம் பெரிய யானையும் ஓரிரு சிறு யானைகளும். சீனாச்சாயலில் ஒரு இளம் சோடி உட்பட பலரும் கண்களாலும் கமெராவினாலும் யானைக் காட்சியை காட்சிப்படுத்தியபடி மாலை நேரத்தை ரசனையாக்கிக் கொண்டிருந்தார்கள்.

முன்னே சோளம் விற்ற நோனாவிடம் சோளம் வாங்கி சாப்பிட்டபடி சிலர் நின்றிருக்க; மற்றவர்கள் ஆங்காங்கே மரங்கள் மறைவில் உச்சா போய்க்கொண்டிருந்தார்கள். சிறிதுநேரம் அங்கு ரிலாக்ஸ் ஆகிய பின் மீண்டும் பயணம் ஆரம்பித்தது; அடுத்த சில நிமிடங்களில் மின்னேரியா பகுதியாக இருக்க வேண்டும், வீதியோரம் மீண்டும் யானை. தனியாக யானை நிற்பது ஆபத்து என்று அனைவரும் தூர நின்று பார்த்துக் கொண்டு இருந்தார்கள். எம் குரங்கு குணம் தான் தெரியுமே; உசிர் போனாலும் செல்ஃபி முக்கியமாச்சே...! ஒரு வழியாக ஓரளவு தூரத்தில் நின்று போட்டோ, செல்ஃபி எடுத்தபின் மீண்டும் புறப்பட்டோம்.

ஹபரன, மருதன்கடவை சந்திகளை கடந்த வான் மிகிந்தலை சந்தியில் இரவு உணவுக்காக நின்றது. காலை ரம்ஸீன் வீட்டு சாப்பாட்டுக்கு பின்னர் சரியான சாப்பாடு நாள் முழுவதும் இல்லாததால் ஒரு பிடி பிடிக்க தயாரானோம். Chamy Restaurant, மருதன்கடவை பக்கமிருந்து வந்தால் மிகிந்தலை சந்தி கடந்தவுடன் இடது பக்கமாக உள்ளது. வெளியே பெரியளவில் நல்ல பார்வை இல்லை, பயங்கர பிசியாக இருப்பதால் சத்தமும் அதிகமாக இருக்கலாம், சேவிஸ்கூட அந்த பிசியில் நூறு சதவிகிதம் இல்லாமல் இருக்கலாம், கொத்து மற்றும் ரைஸ் பற்றி தெரியாது; ஆனால் இரவு நேரத்து சுடச்சுட சோறு கறிக்கு அடிச்சிக்கவே முடியாது.

அனுராதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார நகர் / கிராமங்களின் சோறு கறி சாப்பாட்டிற்கு அடிமை நான். சிங்களவர்களது சமையல் பாணியும் சுவையும் தனியானது, எமது நாக்கு பழகிப்போன எம் ஊர் சோறு கறி போல தொடர்ந்து தினமும் சாப்பிட முடியாதுதான்; ஆனால் அப்பப்போ கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் சிங்களக் கடைகளில் சோறு கறி தவிர வேறெதையும் நான் நினைத்துக் கூட பார்ப்பதில்லை. போஞ்சி பால்கறி, கட்டர்தூள் போட்ட பருப்பு, வல்லாரை / பொன்னாங்காணி, வாவி மீன் என அது ஒரு போதை.

அன்று அந்த போதை உச்சம் தொட்டது, நல்லபசி, சுடச்சுட பிடித்த சிங்கள சோறுகறி, ஒம்லட், நல்ல சுவை வேறு.. சொல்லவா வேண்டும். இந்தக் கடையை ஞாபகம் வைத்திருந்து அடுத்து ஒருதடவை குடும்பமாக மனைவி மகளோடு அனுராதபுரம் சுற்றுலா சென்றபோதும் மறக்காமல் போனோம், அன்றும் ஏமாற்றவில்லை.

அங்கு சாப்பாட்டை முழுப்பிடி பிடித்த பின் மீண்டும் சுவேந்திரன் வாகனத்தை ஒரு பிடி பிடிக்க கையஸ் பறந்தது. ரம்பேவ, மதவாச்சி கடந்து வவுனியாவில் இறக்கம். அடுத்த நாள் வேலை காரணமாக ஜனனனை இறக்கிவிட்டு சம்பத் வங்கி கெஸ்ட் ஹவுஸ் முன் சிறிது நேரம் பேசிவிட்டு மீண்டும் பயணம் ஆரம்பித்தது.

மாங்குளத்தில் எம் சகா கிருஷாந்தனின் கட்டுப்பாட்டில் உள்ள அவரது பெரியப்பாவின் வீடு ஒன்று இருந்தது. அங்கு ஒரு வேலை இருந்ததால் மாங்குளத்தில் அவரது வீட்டிற்கு சென்றோம். இரவு 9 மணி கடந்திருந்தது. கிருஷாந்தன் அங்குள்ள உதவியாளருடன் பேசிக்கொண்டிருக்க நாம் அந்த வீட்டின் பின்புறம் போனோம், அங்கு  லத்தி, பெரிய கால் அடையாளம், வேலி பிரிந்திருந்தது போன்றன யானை வந்து போவதை காண்பித்தது.

யானைகள் அட்டகாசம் அதிகமாக இருக்கும்; வாழை, கரும்பு பயிர்களை நாசமாக்கிவிடும் என்பதால் காவலுக்கு ஒருவர் அவசியம் என்பதால்தான் உதவியாளர் இரவில் அங்கு அவதானமாக இருக்க வேண்டும். தல சுவேந்திரன் பயங்கர அசதியாகியிருந்தான். மூன்று நாட்கள் தொடர்ந்து ட்டரைவிங், சதுர்த்தி விரதம் என்று மதியம் பாசிக்குடாவில் பிளேன்டி ரொட்டியோடு இருந்ததால் ஆள் நித்திரை கொண்டே ஆகவேண்டிய கட்டாயம்.

வாகனம் சுகு கைகளுக்கு மாறியது. நிறையவே வாகனம் ஓட்டிய அனுபவமிருந்ததால் அதிவேக ஓட்டத்துடன் முருகண்டி பிள்ளையார் கோவிலும் வந்தது. அங்கு கும்பிட்டு முடித்து புறப்படுவதற்குள் சுவேந்திரனுக்கு நித்திரை கலைந்து மீண்டும் ட்ரைவர் சீட் ஆசை வந்துவிட்டது. மீண்டும் தலை மிதிக்க தொடங்கியது...

யாழ்ப்பாணம் வந்துவிட்டது, அனைவரும் பத்திரமாக வீடு திரும்பிவிட்டோம். ஆனால் அந்த பயணமும், மகிழ்ச்சியான தருணங்களின் நினைவுகளும் தொடர்ந்துகொண்டே இருந்தது... இருக்கிறது... இருக்கும். இப்போது இரண்டு வருடங்கள் கழிந்திருக்கிறது, மீண்டும் மட்டு மண்ணை மிதிக்க சந்தர்ப்பம் அமையவில்லை, ஆனால் அமையும், அமையவேண்டும்..! மீண்டும் நண்பர்கள் குழாமுடன் மட்டக்களப்பு செல்ல கசக்குமா என்ன..!

பயணங்கள் தொடரும்....

ரம்ஸீன் வலீமாவில் சஹான் சாப்பாடு

போர்த்துக்கேயர் கோட்டை காவலில்

மட்டக்களப்பு வாவியில்

விடுதி ஐயாவுடன்

நின்ற விடுதியும் சென்ற வானும்

மாமாங்க பிள்ளையார் கோயில் முன்

மாமாங்க பிள்ளையார் கோயில் குளம்

ரம்ஸீன் வீட்டு சாப்பாடு

ரம்ஸீன் வீடு

மின்னேரியாவில் வீதியோர யானை 

Saturday, 9 May 2020

மட்டக்களப்பின் முதல் தடம்... (பங்குனி 2018)


பிறந்து 36 வருடங்கள்  உருண்டோடிய பின்னர்தான்  மீன்பாடும் தேன் நாடு தன் மண்ணை மிதிக்க என்னை அழைத்தது. இலங்கை எனும் இயற்கை பேரரசியின் கிழக்கு மாகாணத்தின் நடுநாயகமான மாவட்டம். தரைத் தோற்றத்தில் மூன்று பக்கமும் தரையால் சூழப்பட்டு, ஒரு பகுதியினூடாக நீர் தரையை ஊடறுத்துள்ள களப்பு. வாவியின் பேரழகில் மிதக்கும் நகரமான மட்டக்களப்பு மண்ணை எமது கையஸ் வாகனம் வந்தடைந்த நேரம் இரவு 10.30. 

இரண்டு வாரங்களுக்கு முன்னர் திருமண அழைப்பிதழை வைத்துவிட்டு கண்டிப்பாக வரவேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டிருந்தார் நண்பர் ரம்ஸீன். இரண்டு வருடப் பழக்கம், காத்தான்குடியில் இருந்து வேலை நிமித்தமாக யாழ்ப்பாணம் வந்தவர் நண்பர் ஜனனன் மூலமாக அறிமுகமானவர். ரம்ஸீன் அந்த 2 வருடங்களில் எம் நட்பு வட்டத்தில் மிக முக்கியமானவராக அனைவருடனும் நெருக்கமாகியிருந்தார். அந்த இரண்டு வருடங்கள் நாம் நிறைய சுற்றியிருக்கிறோம், சாப்பிட்டிருக்கிறோம், அவை பற்றிய பதிவுகள் பின்னர் எழுதப்படும் 😆

ரம்ஸீனின் திருமண அழைப்பை தவிர்க்க முடியாது, அதனால் நம் நண்பர்கள் குழு பிரயாணத்திற்கு தயாராகிவிட்டது. வெறும் திருமண பயணமாக இல்லாமல் இரண்டு நாள் சுற்றுலாவாக திட்டமிட்டோம். எட்டுப்பேர், பலருக்கும் மட்டக்களப்பு அதுதான் முதல்தடவை. 

வழமைபோல் அதிகாலை நேரத்தில் திட்டமிட்ட பயணம், ஆனால் வழமைபோல பத்துமணி தாண்டியே யாழ்ப்பாண நகரைத் தாண்டினோம். சுவேந்திரன்; எம்மவர்களில் மூத்தவர், பச்சிலர். வாகனத்தை கையில் கொடுத்தால் பத்து நாளைக்கும் சலிக்காமல், உற்சாகமாக வாகனமோட்டும் ட்ரைவிங் வெறியன். கூடவே கிட்டத்தட்ட வடகிழக்கு பிரதேசங்களில் பெரும்பாலான இடங்களில் பரிச்சயமான, பரிச்சியம் இல்லையென்றால் என்ன பரிச்சியமானது போல காண்பிக்கும் அசகாயசூரன். கடக்கும்‌ இடங்களின் போரியல் தடயங்கள், வரலாறுகளை தெரிந்ததும் கற்பனையும் என இரண்டற உருட்டி கலந்து அடித்தாலும் அத்தனை சுவாரசியமான கதைசொல்லி. அதேநேரம் நேரந்தவறாமைக்கு நேரெதிரி, வரலாற்றில் சொன்ன நேரத்திற்கு 1மணி நேரம் பிந்தி வராத நாளே கிடையாது. சில பல இம்சைகள் தந்தாலும் பிரயாணங்களின் அழகாக்கி எம் தல சுவேந்திரன். 

சுவேந்திரனின் கால் வாகனத்தின் பிரேக்கை அழுத்தி நிறுத்திய இடம்; பரந்தன் கடந்து கிளிநொச்சி நுழைந்ததும் வரவேற்கும் பாரதி உணவகம். சோறு கறி, தந்தூரி சிக்கன், அன்னாசி யூஸ் என பிடித்தவர் பிடித்த உணவை உண்ண வயிறும் மனமும் பாரதியின் பரிமாறலால் நிறைந்தது. கிளிநொச்சியில் நம்பி சாப்பாட்டில் கைவைக்க பாரதியிடம் செல்ல தயங்கத் தேவையில்லை. 

முறிகண்டி பிள்ளையார்... 90 சதவீதமான வாகனங்கள் தரித்து பிள்ளையாரை வணங்காமல் செல்வதில்லை. பாரதியில் அசைவ உணவுகள் உள்ளே போய் ஒருமணி நேரம் ஆகாத நிலையில் சற்று தயங்கி தயங்கி நின்றாலும்; பின்னர் நம்ப பிள்ளையார் தானே என்று பிள்ளையாரை சற்று தூர நின்று குட்டிக் கும்பிட்டோம். 

பயணம் தொடர்ந்தது, வவுனியா கடந்து சில மணி நேரத்தில் தற்போது கிண்ணியா.... திருகோணமலை மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள இடம். அழகிய கிண்ணியா பாலத்தை கடந்த பின்னர் ஓரிடம்..! கன்னி இல்லாமல் கூட இருப்பர், சிலர் தண்ணி இல்லாமல் இருக்கமாட்டர் என்கிற உலக நியதிக்கு அமைய; கிண்ணியாவில் தண்ணி வாங்க வான் நிறுத்தப்படுகிறது. 

அடுத்த சில மணித்தியாலங்கள் பொறுமையாக இருக்க முடியுமா என்ன? சட்டத்தை கடுமையாக மதிப்பவர்கள் என்பதால்; ஓடும் வாகனத்தில் தண்ணி அடிக்க சட்டத்தில் இடமில்லை என்பதை அறிந்திருந்ததால் ஆங்காங்கே வாகனம் நிறுத்தும் போதெல்லாம் பியர் டின்கள் சில காலியாகின.

இயற்கை உபாதையை வீதியோர பற்றைகளுக்குள் சரமாரியான வேட்டுக்களாக தீர்த்துக்கட்டிவிட்டு வீதியில் கால்நீட்டி‌ இருந்து சில நிமிடங்கள் இளைப்பாறிய அனுபவங்களை எல்லாம் கடந்து ஒருவழியாக மட்டக்களப்பு நகரை வந்தடைந்தோம். 

கொலைப் பசி..  முன்னமே ரம்ஸீன் சிபாரிசு செய்ததால் ஹாஜியார் உணவகத்தின் முன் வாகனம் நிறுத்தப்பட்டது. கஷ்டகாலம் ஹாஜியாரில் கடையை பூட்டும் வேலை மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. சரி இனி என்ன செய்வது என்று அருகில் இருந்த இப்ராஹிம் சாப்பாட்டுக் கடையினுள் நுளைந்தோம். 

ஆன்டி வெறியர்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் பிளேன்டி வெறியர்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அது எங்கட டீம்தான், சப்ளையரே "ஏன்டா ஏன்" என பார்க்கும் அளவுக்கு ஆளுக்கு ஐந்தாறு இஞ்சிப்பிளேன்டி அடிப்பதில் கில்லாடிகள். பிளேன்டி மட்டுமல்ல ஆம்லெட்டிலும் கடும் காமம் உள்ள கூட்டம் இது. 

இப்ராகிம் டீ மாஸ்டர் மாங்கு மாங்கென்று இஞ்சிப் பிளேன்டி ஊத்த ஊத்த, கொத்து ரொட்டியை தந்துவிட்டு கொத்து மாஸ்டர் ஆம்லெட்டுக்கான முட்டைகளை உடைத்து கோதுகளை எறிந்து கொண்டிருந்தார். பெண்களில்கூட சற்று டாக் கலர்களிலேயே என் கண்கள் அதிகம் போகும், ஆனால் அசைவ கடைகளின் இடியப்பம் என்றால் பால் நிறத்தில் இருக்கவேண்டும். கூடவே முஸ்லிம் / சிங்கள கடைகளின் பாலாணம் (சொதி) + இடித்த சம்பல் + பருப்புக்கறி வெள்ளை இடியப்பத்தை தேவாமிர்தமாக்கும், கூடவே ஆட்டிறைச்சி கறி..! இப்ராகிம் 11.00 மணி கடந்தும் அருமையான உபச்சாரத்தை கொடுத்தது..! நம் ஊர் கடைகளில் கடை பூட்டப்போகும் நேரத்து ஊழியர்களது உபச்சாரத்தை நினைத்து பார்த்தோம்..! ம்ம்ம்.. கஸ்டமர் சேவிசில் நாம் இன்னமும் கிரிக்கெட்டில் சிம்பாவேதான்.

கல்லடி... மட்டக்களப்புக்கு தென்கிழக்கு திசையில் உள்ள இடம். அழகிய கல்லடி கடற்கரையை அண்டிய பிரதேசம். எமக்கான தங்குமிடம் அங்கேதான் ஒழுங்கு செய்திருந்ததால் கல்லடி பாலத்தை நோக்கி வாகனம் செல்லவும்; ட்ராபிக் பொலிஸ் அடித்த டோச்லைட் மறித்தது. 

Documents எல்லாம் ‌சரியாக இருந்தது, ஏன் ஹெட்லைட் நிப்பாட்டவில்லை என்று ஆரம்பித்தார் ஆபீசர். ஓ.... இவர் அதுக்கு வர்ராரில்லன்னு புரிந்தது; ஆனால் வாகனம் ஓட்டுவது யார்? எமனுக்கே இடியப்பம் தீத்திற தல சுரேந்திரன். இப்ராஹிம்ல சாப்பிட்ட இடியப்பம் செமிக்க முன்னமே மறிச்ச ஆபீசருக்கு தல ஏதோ இடியப்பம் தீத்தி மந்திரமோதிவிட; ஆபீசர் Goodnight சொல்லி வழிவிட வான் கிளம்பியது. இப்படி ஆபீசர்களிடம் தல ஓதும் மந்திரம் என்ன என்பது இன்று வரை நமக்கு தெரியாது; பாட்ஷா ரஜினி போல "உண்மையை சொன்னேன்" என பல்லை காட்டியபடி வருவான் தல, ஆனால் வெற்றியோடு. 

Beni Beach Resort. கல்லடி கடற்கரையை அண்டிய சிறு கிராமத்தில் சிறிய வீடு ஒன்றை சுற்றுலா பயணிகளை கருத்தில் கொண்டு விடுதியாக்கி இருக்கிறார்கள். 2004 ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு உள் விறாந்தையில் வரவேற்க நான்கு அறைகொண்ட வீட்டை எமது அணி ஆட்கொண்டது. 

பல மணிநேர பயணம், வயிறு நிறைந்த உணவு, நேரம் இரவு 11.30 கடந்திருந்தாலும் வீட்டினுள் அடங்கியிருக்க மனம் விரும்பவில்லை. அருகில் இருந்த கல்லடி  கடற்கரையை  2 நிமிடத்தில் நடந்து அடைந்தோம். ஒரு கட்டடத்தின் படிக்கட்டில் சிலர் அமர, ஏனையவர்கள் மணலில் நடந்து சற்றுத்தூரத்தில் இருந்த கடலின் அலை தொட்டுவிட்ட நுரைகளின் ஈரம் காலில்ப்படும் இடம்வரை சென்றோம்.

ம்ம்ம்.. பொறாமை. இரண்டு மூன்று இளம் குடும்பத்தினர், கணவன், மனைவி, பிள்ளைகள் என வார இறுதி விடுமுறையை கடற்கரையில் கொண்ணாடிக் கொண்டிருந்தார்கள். பொதிகளில் உணவு, விரிக்க பெரிய படங்கு, போர்வைகள் என திட்டமிட்ட அழகிய இரவில் 12 மணி கடந்தும் பிள்ளைகளின் விளையாட்டுக்கள் ஓயவில்லை.  சுதந்திரமாக துணிந்து இப்படி இரவு நேரத்தில் கடற்கரையில் திளைத்திருக்க கல்லடி கொடுத்த பாதுகாப்பு உத்தரவாதம் ஆச்சரியமாக இருந்தது. 

மற்றவர்கள் விடுதி சென்றபின்; நாம் ஓரிருவர் 12.00 மணி கடந்த பின்னரும் சற்று தூரம் இடம் / விடுப்பு பார்க்கவும், தின்றது செமிக்க வேண்டியும் 20 நிமிடங்கள் நடை போட்டுவிட்டு விடுதிக்கு திரும்பினோம்‌. களைப்பு, பிந்திய உறக்கம் என அதிகநேரம் காலையில் உறங்க நியாயமான காரணம் இருந்தாலும்; கிழக்கு பக்கமாக இருக்கும் கல்லடி கடற்கரையின் சூரிய உதயத்தை தவறவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன், அலாரம் சரிசெய்து தூங்கப்போனது 1 மணியளவில். புது இடம், எங்கே தூக்கம் வரும்?  

2,3 மணி நேர தூக்கம்கூட இல்லை, முழிப்பு வந்துவிட்டது. ஒருவாறு நிலம் தெரியும் வெளிச்சம் வர; நண்பன் செத்தல் என்கிற செந்தூரனை அழைத்துக் கொண்டு கல்லடி கடற்கரைக்கு கிளம்பினேன். எனக்கும் சூரியனுக்கும் ஒரு முற்பிறவி பகை ஏதோ இருந்திருக்க வேண்டும். புது இடம் எங்கும் கமெராவுடன் போனால் முகிலுக்குள் மறைந்திருந்து கடுப்பேத்துவதே அவன் வேலை. கல்லடியிலும் தன் வேலையை காட்டினாலும்; அப்பப்போ வெளிவந்ததில் ஒருசில புகைப்படங்கள் கிடைத்தது. கரைவலை இழுப்பதை முதல் முதலாக நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அன்றைய  அதிகாலை அழகானதாக கடந்தது. தொடர்ந்து அன்றைய நாள் முழுவதும் நாள் அழகாக அருமையாக நகர்ந்தது.

காலை 8 மணிக்கெல்லாம் அனைவரும் தயார். கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரரை நோக்கி செல்ல தயாரானோம். செல்லும் வழியில் காத்தான்குடியில் மாப்பிள்ளை ரம்ஸீனை சந்தித்தபோது; மாப்பு மாமனார் வீட்டில் இருந்தார். அவர் உள்ளே திரும்பத்திரும்ப அழைத்தபோதும் அடுத்த சில மணித்தியாலங்களில் வலீமா இருக்கும்போது தொந்தரவு செய்யக்கூடாது என்பதால் வீதியில் நின்று பேசிவிட்டு மதியம் சந்திப்பதாக சொல்லிவிட்டு கிளம்பினோம்.

காத்தான்குடியில் இருந்து ஆரையம்பதி வீதியால் சென்றபோது யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதிகளில் இருப்பதுபோல இருந்தது; ஆனால் காத்தான்குடியோ செல்வச் செழிப்புடன் மத்திய கிழக்கு நாடுகள் போல இருந்தது. ஹிஸ்புல்லா காத்தான்குடியை அப்படி அழகாக்கியிருக்கிறார். 

மண்முனை பாலம் கடந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரரை அடைந்தோம். இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்று. யுத்த வடுக்களால் பஞ்சத்தில் இருந்த நிலையில் இருந்தது, கட்டட பணிகள் மெதுவாக நகர்ந்த வண்ணம் இருந்தன, நுழைவாயில் கோபுரம் மட்டும் பூரணமாக கட்டப்பட்டிருந்தது. மிகவும் அமைதியான ரம்யமான சூழலில் ஆன்மா லயப்படும் ஓர் ஆலயத்தை தரிசித்த திருப்தியுடன் திரும்பினோம்.

மீண்டும் மண்முனை பாலத்தை கடந்து அருகில் இருந்த சிறிய பெட்டிக் கடையருகில் தலயின் கால் வாகனத்தின் பிரேக்கை ஓங்கி அழுத்தியது. சரியான பசி, ஆனால் வலீமா சாப்பாடு சில மணி நேரத்தில் இருக்கு, அதனால் சிறிது பலகாரம் ஏதும் சாப்பிடும் திட்டத்துடன் உள்ளே போனோம். பற்றிஸ், வடை கொடுத்த சுவை ப்ளேன்டி வெறியர்களை தூண்டிவிட்டது. பலகார அலுமாரி காலியானது, ஆளுக்கு நாலு ப்ளேன்டி வேறு. அனைவரும் ஆறு மாத பிள்ளைத்தாச்சி வயிற்றோடு மீண்டும் வாகனத்தில் ஏற வாகனம் பறக்கிறது....

வலீமாவுக்கு மதியம் 1 மணிக்கெல்லாம் போனால் போதும் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக நேரம் இருந்தது, கொஞ்சமாவது செமிக்க வேண்டும். மீண்டும் கல்லடி கடற்கரை வீதியை அடைந்நது கையஸ். வடக்கு பக்கமாக போய்க்கொண்டே இருந்தால் ஓரிடத்தில் தென்பட்டது சவுக்கங்காடு. 

சிங்களவர்கள் போல வாழ்க்கையை யாராலும் அனுபவித்து வாழ முடியாது. பெரிய வருமானம் இருக்காது, பணம் பெரிதாக இருக்காது ஆனால் கிடைக்கும் வாகனம் எதுவோ; அதில் குடும்பமாக, ஊராக என கிளம்பி வந்துவிடுவார்கள். ஒரு மர நிழலில் சோறும் பருப்பும் சமைத்து சாப்பிட்டுவிட்டு சுற்றிப் பார்ப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. சவுக்கு காட்டிலும் ஒரு பட்டா வாகனத்தில் வந்த குடும்பம் சமையல் ஆக்கிக் கொண்டிருந்தது. ஆனால் சாப்பாடென்றால் திரும்பிக்கூட பார்க்க மனமில்லாத நிலையில் வயிறு நிரம்பியிருந்தது. 

வாகனத்தில் இருந்து இறங்கி சவுக்கங் காட்டினூடு நடக்க தொடங்கினோம்; செமிக்கிற அளவில் லாபம் என்று. போகப்போக போய்க்கொண்டே இருந்தது, ஆனாலும் போய்க்கொண்டே இருந்தோம். ஒரு வழியாக புதிய அனுபவமாக அந்த சவுக்கங் காட்டின் முடிவை அடைந்துவிட்டோம். பிரமிப்பு, காட்டுக்கு அடுத்து பெரியதொரு வெளி, வெளிக்கு அடுத்து கடல்நீர் தெரிகிறது. உச்சி வெயில் வேறு மண்டையை பிறக்கிறது. அனைவரும் அடுத்து நகர மறுக்க;எமக்கு பரிச்சயமானவர் என்றாலும் எமது நெருங்கிய வட்டத்தில் இல்லாத, இந்த பயணத்தில்தான் எம்முடன் புதிதாக இணைந்திருந்த; அபிராம் என்னோடு தொடர்ந்து வர ஆர்வம் காட்டினார்.

மண்டையை பிளக்கும் வெய்யிலை கடந்து கடற்கரையை அடைய நிறையவே களைத்து விட்டோம். அப்படி என்ன இருக்கிறது அந்த நீர் பரப்பில்? அந்த சிறிய நீர்ப்பகுதிதான் மட்டக்களப்பின் பேரழகான நிலத்தை ஊடறுத்து உள்ளிருக்கும் நீர்ப்பகுதிக்கான ஒரே கடல் தொடுகையிடம். வந்தது வீண்போகவில்லை, புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் அழகாகவும் இருந்தது, மறு கரையில் சிலர் குளித்துக்கொண்டும் இருந்தனர். 10 நிமிடங்கள் அங்கு நின்றபின் மீண்டும் வெயிலின் கோர தாண்டவத்தில் இருந்து தப்பிக்க ஓட்டமும் நடையுமாக மீதி நண்பர்கள் இருந்த இடம் வந்தோம். 1/3 வயிறு காலியாகிவிட்டது, திரும்ப நடந்து சவுக்கங் காட்டினூடு ஆரம்ப இடத்தை அடைய மீதியும் செரித்துவிடும் என்கிற நம்பிக்கை வந்திருந்நது. 

பேசிப்பேசி சற்று வேகமாக நடக்கத் தொடங்கினோம்.. 

தொடரும்.....

கல்லடி கடற்கரை அதிகாலை

சவுக்கங் காட்டினுள்... 

 கொக்கட்டிச்சோலை

 மண்முனை சிற்றுண்டி சாலை

 நீர் நிலத்தை ஊடறுக்கும் பகுதி

Saturday, 25 April 2020

பயணங்கள்...




பயணங்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுபட்ட உணர்வுகளை கொடுக்க வல்லது. குறிப்பிட்ட ஒருவருக்கே வெவ்வேறு பயணங்கள் வெவ்வேறு விதமான உணர்வுகளை கொடுக்கும். ஏன் ஒருவருக்கு ஒரு பயணமே வெவ்வேறுபட்ட உணர்வுகளைக்கூட கொடுத்திருக்கும்.


பயணம் செய்யும் வாகனம், செல்லும் பாதை, கிடைத்திருக்கும் இருக்கை, சக பயணிகள், கூட வந்த உறவுகள் / நண்பர்கள், தங்குமிடம், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பயண இலக்கு, உடல்நிலை, மனநிலை, புற அழுத்தங்கள் என பல விடயங்கள் ஒரு பயணம் எமக்கு கொடுக்கும் உணர்வுகளின் தன்மையை தீர்மானிக்கிறது.


இருக்கையில் அமர்ந்ததும் தூங்கி இலக்கு வந்ததும் விழிக்கும் மனிதர்களை விடுத்து மீதி அனைவருக்கும் ஒவ்வொரு பயணமும் அனுபவம். கணத்தில் ரசிக்க, பின் நினைவுகொள்ள என ஏராளம் விடயங்கள் பயணங்கள் தரும் வரம், வரம் தருவதால் பயணங்கள் கூட தவம்தான்.


பயணங்கள் என்றால் நாடு கடந்து, பல மைல்கள் கடந்து செல்ல வேண்டியவை என்று எந்த விதியுமில்லை; சில கிலோமீட்டர்கள் செல்லும் பயணங்களில் கூட சுவாரஸ்யமான, மறக்கமுடியாத, திகிலான, பெரு மகிழ்ச்சியான பயணங்கள் அமையும்.


அப்படியான சாதாரண பயணங்கள் கொடுத்த சுவாரஸ்யங்கள், திட்டமிடாத திடீர் பயணங்கள், திட்டமிட்ட சுற்றுலாக்கள் என என் பயண அனுபவங்களை இந்த வலைப்பூவில் பதியப்போகிறேன். கூடவே செல்லும் இடங்களின் உணவு மற்றும் உணவகங்கள் பற்றியும் பதிவிட நினைத்துள்ளேன்.


ஒரு வெளிப்படையான என் சுய நாட்குறிப்பாக இதனை பதிவிடுகிறேன்; சில பதிவுகள் சிலருக்கு சுற்றுலா வழிகாட்டியாக, சுற்றுலா பயண அனுபவத்திற்கான தூண்டுதலாக அமைந்தால் மிக்க மகிழ்ச்சி.


பயணங்கள் தொடரும்......